கணினியின் வரலாறு
இன்றைய மனித
வாழ்வின் அனைத்து நடைமுறைகளிலும் கணினியின் ஆதிக்கத்தைக் காண முடிகிறது. கணினியைப்
புறக்கணித்துவிட்டு மனித வாழ்க்கையை மேம்படுத்த முடியாது.
கணினி
கணிக்கும் பணியைச் செய்யும் சாதனம் கணினி. பயனரிடமிருந்து
உள்ளீடுகளைப் பெற்று, அவற்றைச் செயல்முறைப்படுத்தி, பயனுள்ள தகவலாய் மாற்றி,
புரியும் வடிவில் வெளியிடும் ஒரு மின்னணு சாதனம் கணினி.
மரத்திலிருந்து
ஆப்பிள் பழம் கீழே விழுந்தது. அதைப் பார்த்ததும் நியூட்டன் புவியீர்ப்பு விசையைக்
கண்டறிந்தார். அதைப்போல, ஒரு திடீர் நிகழ்வின் போது மனிதன் கணினியைக்
கண்டுபிடித்து விடவில்லை. பலநூறு ஆண்டுகளின் பரிணாம வளர்ச்சியில் உருவானதே கணினி.
கணிக்கும் பணி
கணிக்கும்
பணிக்காக உருவாக்கப்பட்டதே கணினி. கணிக்கின்ற பணி மனித குலத்துக்குப் புதியது
அன்று. எண்ணுவதும் கணக்கிடுவதும் நீண்ட காலமாக நடைபெற்று வருவதே. ஆதிகாலத்தில்
மனிதன் பண்டமாற்று முறையில் தனக்குத் தேவையான பொருள்களைப் பெற்று வந்தான்.
மனிதனின் தேவை பெருகப் பெருகப் பண்டமாற்று வணிகம் எளிதாக இருக்கவில்லை. எனவே
பண்டத்தின் மதிப்பைப் பணமதிப்பாகக் கணக்கிடும் முறை வந்தது. அதன்பிறகு எண்ணுவதும்
கணக்கிடுவதும் ஒரு கலையாகவே வளரத் தொடங்கின. வாழ்க்கை முறை சிக்கலாகிப் போனது.
கணக்கீட்டு கணிப்பு சாதனங்கள் உருவாக்கப்பட்டன. கணிப்பு சாதனங்கள் உச்சகட்ட
வளர்ச்சியில் கணினி பிறந்தது.
முதல் கணினி
ஆசியா மைனர்
பகுதியில் 5000 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ‘அபாகஸ்’ கருவியே உலகின் முதல்
கணினி. மரச்சட்டங்களில் பொருத்தப்பட்ட கம்பிகளில் மணிகள் கோக்கப் பட்டிருக்கும்.
தமிழ்நாட்டில் ‘மணிச்சட்டம்’ என்ற பெயரில் பயன்பாட்டில் இருந்தது. இந்தியாவில்
இன்றைக்கும் ‘அபாகஸ்’ மூலம் மாணவர்களுக்குக் கணக்கீடுகளைக் கற்றுத் தரும் பயிற்சி
மையங்கள் ஏராளமாய் உள்ளன.
.
தந்தைக்கு உதவி
கணித மேதை பிளைசி
பாஸ்கலின் தந்தை
வரிவசூலிப்பவராகப் பணியாற்றி வந்தார். தினமும் இரவு வெகுநேரம் வரை வரிவசூல்
கணக்குடன் போராடிக் கொண்டிருப்பார். கல்லூரி மாணவராய் இருந்த பாஸ்கல் தன்
தந்தையின் கணக்குகளில் உதவ விரும்பினார். தன்னுடைய 19-வது வயதில் கூட்டல்
கணக்குகளை எளிதாகச் செய்ய உதவும் ஒரு கருவியை உருவாக்கினார். ‘எண்முறைச் சக்கரக்
கணிப்பி’ (Numerical Wheel Calculator) என்று அக்கருவிக்குப் பெயரிட்டார்.
கூட்டல்
செவ்வக வடிவ
வெண்கலப் பெட்டியில் உருளக் கூடிய எட்டு சக்கரங்கள் பொருத்தப் பட்டிருக்கும்.
எட்டு இலக்க எண்களைக் கூட்ட இது பயன்பட்டது. ‘கூட்டல் எந்திரம்’ என்றும்
‘பாஸ்கலைன்’ என்றும் இக்கருவி அழைக்கப்பட்டது.
கூட்டலும் பெருக்கலும்
ஜெர்மன்
நாட்டுக் கணிதமேதையும் தத்துவ ஞானியுமான காட்ஃபிரைடு வில்வெல்ம் லைப்னிக், 1694 -ஆம் ஆண்டில்,
பாஸ்கலன் எந்திரத்தை மேம்படுத்திப் புதிய கருவியை உருவாக்கினார். கூட்டல் கணக்கு
மட்டுமின்றி பெருக்கல் கணக்கையும் அக்கருவியில் எளிதாகச் செய்ய முடிந்தது.
கணக்கீடு
இன்றைய நவீன
கணினியின் தந்தை (Father of Computer) என்று அழைக்கப்படுபவர், இங்கிலாந்து
நாட்டுக் கணிதப் பேராசிரியர் சார்லஸ் மாபேஜ் (1791-1871) ஆவார். கணிதத்தில், வேறுபாட்டியல்
நிகர்ப்பாடுகளை (Differential Equations) தீர்வு செய்யக் கூடிய வேறுபாட்டுப் பொறி
(Difference Engine) என்னும் எந்திரத்தை உருவாக்கினார். நீராவியால் இயங்கும்
மிகப்பெரிய எந்திரம். இந்த எந்திரத்தில் கணினி நிரல் (Program)
சேமிக்கப்பட்டிருக்கும். கணக்கீடுகளைச் செய்து விடையைத் தானாகவே அச்சிட்டுத்
தரும்.
பகுப்பாய்வுப் பொறி
வேறுபாட்டுப்
பொறியில் பத்து ஆண்டுகள் பணிபுரிந்த மாபேஜ். உலகின்
முதல் கணினி என்று கூறப்படும் பகுப்பாய்வுப் பொறியை (Analytical Engine)
உருவாக்குவதில் முணைப்புக் காட்டினார்.
ஆங்கிலக்
கவிஞர் பைரனின் மகளான லேடி அகஸ்டா
அடா லவ்லேஸ் பாபேஜின்
பணிகளில் துணைநின்றார். பகுப்பாய்வுப் பொறியின் வடிவமைப்புக்கு உதவினார்.
அப்பொறியில் உட்செலுத்திச் செயல்படுத்தக் கூடிய ஆணைகள் அடங்கிய நிரலை (Program)
உருவாக்கினார். உலகின் முதல் கணினி நிரலர் (Computer Programmer) என்னும்
பெருமையைப் பெற்றார். 1980-களில் அமெரிக்க நாட்டுப் பாதுகாப்புத் துறை, புதியதாக
உருவாக்கிய கணினி மொழிக்கு ‘அடா’ (Ada) எனப் பெயரிட்டு அவரைச் சிறப்பித்தது.
வல்லுநர்களின் பங்களிப்பு
தொடர்ந்து
வந்த காலங்களில் பல்வேறு பொறியில் வல்லுநர்கள் கணினி வளர்ச்சியில்
பங்காற்றியுள்ளனர். 1931-ஆம் ஆண்டில் வன்னெவர் புஷ், சிக்கலான
வேறுபாட்டியல் நிகர்ப்பாடுகளைத் தீர்வு செய்ய உதவும் கணிப்பியை உருவாக்கினார்.
1941-ஆம் ஆண்டில் ஜெர்மன் நாட்டுப் பொறியாளர் கொனார்டு ஸூஸ், விமானங்களையும் ஏவுகணைகளையும் வடிவமைக்க உதவும். ‘இஸட்-3’
என்னும் கணினியை வடிவமைத்தார். இதன்பிறகு ஏற்பட்ட கணினியின் வளர்ச்சிப் போக்கினை
கணினியின் தலைமுறைகளாகப் பகுத்துக் காண்போம்.
கணினி
மென்பொருள் கோப்புகள்
மென்பொருள் (software) என்பது, வன்பொருளுக்கு (hardware) வேலை கொடுக்கும் கட்டளைகளை (instruction sets), அல்லது நிரல்களை (programs), குறிக்கிறது. உங்கள் கணினியில் கடிதங்கள் எழுதப் பயன்படுத்தும் சொற்செயலி (word processing program) ஒரு வகை மென்பொருள்தான். இயக்க முறைமை (Operating system) என்பது உங்கள் கணினியையும் அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் சாதனங்களையும் நிர்வகிக்கும் மென்பொருள். Windows -உம் Mac OS -உம் பரவலாக அறியப்பட்ட இரண்டு இயக்க முறைமைகள் (operating systems).
கணினியுடன் இணையத்தள இணைப்பானது படிப்படியாக வளர்ச்சி அடைந்தது. 1960 ஆம் ஆண்டில், ஒரு கணினியிலிருந்து மற்றொரு கண்னிக்குச் செய்தியை மாற்ற மின்காந்த நாடாவைப் பயன்படுத்தினர். இது மிகுந்த காலச் செலவை ஏற்படுத்தியது. இதற்காக மாற்றாக, ஒரு கட்டத்திற்குள் இருக்கும் கணினிகளை எல்லாம் கம்பிச்சுருளுடன் இணைக்க ஈதர்நெட் அட்டை என்னும் சிறுபலகையைப் பொருத்தி பயன்படுத்தினர். இந்த இணைப்பு குறும்பரப்பு வலைப்பின்னல் எனப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு வட்டாரத்துக்குள் உள்ள கணினிகளை இணைத்தனர். இஃது அகன்ற பரப்பு வலைப்பின்னல் கொண்டது. இந்த வலைப்பின்னல் வழியாக உலகம் முழுவதும் உள்ள கணினிகளை ஓரளவுதான் இணைக்க முடிந்தது. முழுமையான இணைப்பைப்பெறச் செயற்கைக்கோள்வழி இணைப்பினைப் பயன்படுத்திப் புவியைச் சுற்றி, நாடுகளின்மீது வலம்வரும் விண்வெளிக்கலண்களுக்கு இடையே இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த உலகம் முழுமைக்கான வலையமைப்பு இணையம் எனப் பெயர் பெற்றது.
சுவிச்சர்லாந்து நாட்டைச் சார்ந்த பிம்பெர்னர் லீ என்னும் இயற்பியல் வல்லுநர், 1989 ஆம் ஆண்டு இணையதளத்திற்கு உலகளாவிய வலைப்பின்னல் எனப்பெயரிட்டார். இதனை வையக விரிவு வலை எனவும் அழைக்கலாம். இவ்வலையமைப்பு, பலசெய்திகளை அழியாமல் பாதுகாக்க உதவுகிறது.
இணையத்திற்குத் தேவையானவை
பேரூர் முதல் சிற்றூர் வரை இணையத்தள வசதிகள் கிடைக்கின்றன. இணையத்தளச் சேவையைப் பயன்படுத்தத் தேவையான பொருள்களாவன.
1. கணினி
2. தொலைபேசி
3. இணையச் சேவை வழங்குநர்
4. மாற்றி (network interface card)
5. தொடர்பு மென்பொருள்
இவற்றைக்கொண்டு இணையத் தொடர்பைப் பெறலாம். இணையத்தைப் பயன்படுத்த, இணையச் சேவைக்கு உரியவரிடம் தனிக்கணக்குத் தொடங்குதல் வேண்டும். பின்பு, கணினியை இணையத்தளத் தடத்தில் இணைத்தல் வேண்டும்.
இணைய இணைப்பு வகைகள்
தொலைபேசி வழியாகக் கணினியையும் மாற்றியையும் இணைத்துப் பயன்படுத்தும் முறை, தொலைபேசி இணைப்புச் சேவையாகும். இம்முறையில் விரைவும் வசதியும் குறைவாக இருந்தமையால், புதிய அணுகுமுறை தேவைப்பட்டது. வையக விரிவு வலை செயல்படுவதைக் கொண்டு, இணைய இணைப்பு நான்கு வகையில் கிடைக்கின்றது. உறுப்பினர் எண்ணிலக்க இணைப்பு, கம்பி வடமாற்றி, செயற்கைக்கோள் சேவை, கண்ணறைச் சேவை என்பன ஆகும்
கணினிவழிக்
கல்வி
கணினியைப் பயன்படுத்திக் கற்கும் கல்வியே கணினிவழிக் கல்வி. வீட்டில் இருந்தபடியே தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், வானியல், வரலாறு, புவியியல், பொது அறிவு, நடனம், கைவேலைப்பாடு என எந்த ஒன்றையும் கற்றுக்கொள்ள இயலும். தொலைதூரக் கல்வியை இணையத்தின் உதவியால் கணினிவழியாகப் பலரும் கற்று வருகின்றனர்.
இணையத்தின் வாயிலாக ஒருவருக்கு ஏற்படும் ஐயங்கள், சிக்கல்கள், தேவைகள், வழிகாட்டுதல்கள் முதலியவற்றுக்கான தீர்வுகளைப் பெறவியலும். தீர்வுகளைப்பெற மின்னஞ்சல் முகவரி உதவுகிறது. வீட்டிலிருந்தபடியே நேருக்குநேர் தொடர்புகொண்டு கற்கும் வாய்ப்பும் இன்று கிடைக்கின்றது.
கணினிவழியாக மொழிக்கல்வியும் பெறவியலும். மொழியின் அடிப்படைத் திறன்களான கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் எனத் தொடங்கி உயர்நிலைத் திறன்களான கதை, கட்டுரை, செய்யுள், பாடல், கடிதம். சுருக்கி வரைதல், விரித்தெழுதுதல், குறிப்பெடுத்தல், அகராதி தேடல் என அனைத்தையும் இணையம் வாயிலாகக் கற்க இயலும்.
உலகெங்கும் வாழும் தமிழர்க்கும் தமிழறிய விழைவோர்க்கும் இவ்வாய்ப்பினைத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் வழங்குகிறது. தமிழ் என்னும் இணையத்தளம் தமிழ் எழுத்துகளை எழுதவும், ஒலிக்கவும் கற்றுத் தருகிறது.
கணினியின்
பயன்கள்
கணினி, நம் அன்றாட வாழ்வில் பயன்படும் இன்றியமையாத கருவியாகிவிட்டது. வணிகம், அறிவியல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, கல்வி, மருத்துவம், விண்வெளி, பாதுகாப்பு முதலிய பல்துறைகளில் பயன்பட்டு வருகிறது. சொல் விளையாட்டு, பொறியியல் வரைபடம் வரைதல், பொழுதுபோக்கு விளையாட்டுகள், கணிதத் தேற்றங்களின் தீர்வுகள் போன்ற அரிய பணிகளையும் கணினி எளிமையாகச் செய்கிறது.
பேருந்து நிலையங்கள், வங்கிகள், கல்வி நிலையங்கள், உணவகங்கள் என எவ்விடத்தும் கணினியின் ஆட்சியே நிலவுகிறது. அது வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்தி, மக்களின் வாழ்க்கைத்தரம் உயரத் துணை செய்கிறது.
உள்ளங்கையில் உலகம். தொலைத்தொடர்புத் துறையில் ஈராயிரம் ஆண்டுகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தை விடக் கடந்த இருபதாண்டுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பல நூறு மடங்காகும். இன்று ஒருவரை நேரடியாகப் பார்க்காமலே மின்னனுத்தகவல் வாயிலாகத் தொடர்பு கொள்ள முடிகிறது. வீட்டிலிருந்தபடியே உலகத்தைப் பார்க்க, பழக, மகிழ வாய்ப்பைப் பெறவும் இணையம் உதவுகிறது. கடந்த இருபதாண்டுக் கணினிப் பயணத்தில் இணையத்தின் பங்கு மிகச் சிறந்தது என்றே சொல்லவேண்டும். எனினும் கணினி வல்லுநர் பில்கேட்ஸின் கூற்று, இங்கு நினைவிற் கொள்ளத்தக்கது.
கணினியின் பயன்பாடுமிக்குள்ள இந்தக் காலத்தில், தொழில்நுட்ப உத்திகள் அனைத்தையும் பயன்படுத்திக் கணினிவழியாகத் தேவைப்படும் அனைத்துத் தகவல்களையும் பெறமுடிகிறது. இந்நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பான கணினி, அறிவை விரிவு செய்வதற்கும் உலகத் தொடர்பிற்கும் சிறந்த வாயிலாகத் திகழ்கிறது. அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியின் புதுமைகளான கணினியும் இணையத்தளமும் தொலைத்தொடர்புக் கருவிகளும் உலகத்தையே நம் உள்ளங்கையில் கொண்டு வந்துள்ளன.
REGISTATION NO:-
EU/IS/2016/AC/620
INDEX NO:- CS 7520










No comments:
Post a Comment